வழிபாடு
பழனி

பழனி கோவிலில் 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

Published On 2022-01-12 04:21 GMT   |   Update On 2022-01-12 05:35 GMT
பழனி முருகன் கோவிலில், நாளை மறுநாள் முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழனி முருகன் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப்பட உள்ளது.

அதன்படி பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மண்டகப்படிகளும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு கோவில் மூலம் நடத்தப்படும்.

வருகிற 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதோடு வெள்ளி ரதம் புறப்பாட்டுக்கு பதிலாக கோவில் வளாகத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு கோவில் பணியாளர்களால் நடத்தப்படும்.

இதுமட்டுமின்றி வருகி ற18-ந்தேதி தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்தில் கோவில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து 21-ந்தேதி கோவில் வளாகத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கோவில் வலைத்தளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News