செய்திகள்
நித்யா

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் மர்மச்சாவு

Published On 2021-06-13 08:10 GMT   |   Update On 2021-06-13 08:10 GMT
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தம்பதி இருவரும் காதக்கோட்டையில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பினர்.
மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள காதக்கோட்டையை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் நவீன்குமார் (வயது29). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்த திருமன் என்பவரது மகள் நித்யா(21)வுக்கும், நவீன்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. நித்யா பி.சி.ஏ. படித்து இருந்தார்.

புதுமண தம்பதிகள் இருவரும் நவீன்குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். திருமணமான 6 மாதத்தில் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நவீன்குமாரும், நித்யாவும் தனிக்குடித்தனம் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நித்யா உடல் நலக்குறைவால் மார்க்கம்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் வந்து தங்கினார். கணவர் நவீன்குமாரும், நித்யாவுடன் வந்து தங்கி இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தம்பதி இருவரும் காதக்கோட்டையில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் நவீன்குமார் வழக்கம் போல கட்டிடவேலைக்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் நவீன்குமார் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. நவீன்குமார் தனது மனைவியின் பெயரைச்சொல்லி கதவை தட்டினார். பலமுறை தட்டியும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு நித்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய நித்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் நித்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நித்யாவின் பெற்றோர் நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மூலனூர் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதுகுறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணைநடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த தாராபுரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.நித்யாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News