செய்திகள்
தஞ்சையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தஞ்சையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(வயது 37). கட்டிட தொழிலாளியான இவர், தஞ்சை அருளானந்த நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கட்டிட வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் தான் வேலை பார்க்கும் இடத்தில் 3-வது மாடியில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரம்பி விட்டதா? என்று பார்க்க சென்று உள்ளார். அப்போது தொட்டியின் மேல் ஏறும்போது கைப்பிடி சுவர் உடைந்தது. இதில் சந்துரு தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.