ஆன்மிகம்
திருப்போரூர் முருகன்

திருப்போரூர் முருகனுக்கு அபிஷேகம் கிடையாது ஏன் தெரியுமா?

Published On 2020-08-20 07:44 GMT   |   Update On 2020-08-20 07:44 GMT
திருப்போரூர் ஆலயத்தில் முருகப்பெருமான், தன்னுடைய தேவியர்களான வள்ளி-தெய்வானையுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
சென்னை- மாமல்லபுரம் சாலையில் 46 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருப்போரூர் திருத்தலம். இந்த திருத்தலத்திற்கு சமரபுரி, சமராபுரி, செருவூர் என்று பல பெயர்கள் உள்ளன. இங்குள்ள ஆலயத்தில் முருகப்பெருமான், தன்னுடைய தேவியர்களான வள்ளி-தெய்வானையுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

சுயம்பு மூர்த்தியான முருகனுக்கு, இங்கு மரத்தால் ஆன திருமேனி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்தப்படும். பீடத்தில் கீழ் வள்ளி-தெய்வானையுடன் சிறிய உருவில் காட்சி தரும் முருகனின் விக்கிரகத்திற்கே அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மூலவரின் திருக்கரங்களில் ஜெப மாலையும், கமண்டலமும் காணப்படுகிறது. ஆறுமுகப் பெருமான் சன்னிதியில், சிதம்பர சுவாமிகளால் ஸ்ரீசக்கர இயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் முன்காலத்தில் சிதிலமடைந்து, முருகப்பெருமான் மற்றும் தேவியர்களின் திருவுருவம் பனைமரம் ஒன்றின் கீழ் புதையுண்டு கிடந்தது. அங்கு புற்று ஒன்றும் வளர்ந்துவிட்டது. சிதம்பர சுவாமிகள் கனவில் தோன்றிய முருகப்பெருமானுக்காக, அந்தக் கோவிலையும், சுவாமியின் திருவுருவையும் தற்போதைய நிலைக்கு உயர்த்தினார். இங்கு அம்பாளுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.
Tags:    

Similar News