செய்திகள்
கோப்புபடம்.

பார்கள் மூடப்பட்டதால் மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி செல்லும் மதுப்பிரியர்கள்

Published On 2021-09-10 05:28 GMT   |   Update On 2021-09-10 05:28 GMT
பள்ளிக்கு செல்ல பஸ் நிலையம் வரும் மாணவர்கள் மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டு முகம் சுளித்து நிற்கின்றனர்.
உடுமலை:

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இதனை லாபகரமாக சில சமூக விரோதிகள் பயன்படுத்தி கொள்கின்றனர். பார்கள் திறக்கப்படாததால் மது குடிப்பதற்கு இடமில்லாமல் பலர் குடிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

இதுபோன்றவர்களை கவர்வதற்காக மதுக்கடைகளில் இருந்து மொத்தமாக  மதுபாட்டில்களை வாங்கி கெண்டு சில்லிங் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுப்பிரியர்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்து கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தோ அல்லது அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றோ கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்கின்றனர்.

இது போன்று மதுபாட்டில்களை வாங்குபவர்கள் ஆங்காங்கே இருக்கும் பஸ் நிலையங்கள், பள்ளி வளாகங்கள், திறந்த வெளி விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்களில் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர்.

உடுமலை அருகே உள்ள செல்லப்பம் பாளையம், பொம்மன் சாலை பஸ் நிலையங்களில் காலி மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

பள்ளிக்கு செல்ல பஸ் நிலையம் வரும் மாணவர்கள் மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டு முகம் சுளித்து நிற்கின்றனர். நிழற்குடையில் நிற்க முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது.

சிலர் பாட்டில்களை உடைத்து போடுவதால் மாணவர்கள் மற்றும் பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News