குழந்தை பராமரிப்பு
மாணவர்களே வெற்றி உங்கள் கையில்

மாணவர்களே வெற்றி உங்கள் கையில்

Published On 2022-02-16 04:27 GMT   |   Update On 2022-02-16 04:27 GMT
நீங்கள் தேர்வில் விரும்பும் மதிப்பெண்களை பெற்று சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமா? அதற்கான எளிய சூத்திரம் இதோ!!
தேர்வுகள் நெருங்கி விட்டன. பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகின்றனர்.

நீங்கள் தேர்வில் விரும்பும் மதிப்பெண்களை பெற்று சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமா? அதற்கான எளிய சூத்திரம் இதோ!!

உங்கள் தேர்வு எப்போது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இன்னும் எத்தனை நாள் இருக்கின்றன? நீங்கள் பாடத்திட்டத்தில் எந்த அளவுக்குப் படித்துள்ளீர்கள்? இன்னமும் படிக்காத பாடங்கள் உள்ளனவா? மேற்படி படித்த பாடங்களை எத்தனை முறை (ரிவிஷன்) திரும்ப படித்து உள்ளீர்கள். அடுத்ததாக படித்தவற்றை பார்க்காமல் எத்தனை முறை எழுதிப் பார்த்து உள்ளீர்கள். முதலில் இவைகளை தெளிவாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தற்போது தேர்வுக்காக நாம் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை ஒரு அட்டவணைப் படுத்துங்கள். இவ்வாறு அட்டவணைப் படுத்தும்போது நேர மேலாண்மை மிக முக்கியம். பொதுவாக நாம் எல்லோரும் ஒரு நாளைக்கு அதிக அளவு படிக்கலாம் என்று திட்டம் போடுவோம். ஆனால் ஆரம்பித்த சில நாட்களில் அது முடியாமல் போனதும் முழு திட்டமும் வீணாகிவிடும்.

எனவே நம்மால் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் முழு ஈடுபாட்டோடு படிக்க முடியும், எவ்வளவு நேரம் அதை எழுதிப் பார்க்க முடியும் என்பதை உண்மையாக உணர்ந்து அதற்கேற்ப திட்டம் வகுத்தால் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் குறிப்பிட்டுள்ள பாடங்களை அன்றைய தினமே சிறப்பாக படித்து விடும்பொழுது அல்லது திரும்ப படித்து விடும் பொழுது அல்லது எழுதிப் பார்த்து விடும் போது நமக்கு நாளுக்குநாள் தன்னம்பிக்கை மேம்படும். இதுதான் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பாதை. எப்போதும் படிப்பதை புரிந்து படிக்க வேண்டும் புரிந்து படித்தால் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் புரிந்து பாடத்திலுள்ள கருத்துக்களை சரியாக அறிந்து படித்தோம் என்றால் அது பசுமரத்தாணி போல எப்போதும் நம் மனதில் நிற்கும்.

மாதிரி வினாத்தாள்களை வைத்துக்கொண்டு நீங்களாகவே வீட்டில் பொதுத் தேர்வு எழுதுவது போன்று அவ்வப்போது குறிப்பிட்ட நேரத்தில் எழுதிப் பார்ப்பது உங்களுக்கு தேர்வு எழுதும் போது நேர மேலாண்மை சிறப்பாக அமைய உதவும். இந்த பயிற்சி... தேர்வு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக இயல்பாக நம்மை தேர்வை எழுதவைக்கும் செய்யும்.

நம் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் தேர்வு காலங்களில் அதிக நேரம் கண் விழித்து படித்து தேவையில்லாமல் நம்மை நாமே அதிகப்படியான சோர்வுக்கு உள்ளாக்கி கொள்ளக்கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் அதிக அளவு மூளை உழைப்பு செய்வதால் நமக்கு நன்கு பசி எடுக்கும். எனவே சத்தான ஆகாரம் அவ்வப்போது எடுத்துக் கொள்வது மிக அவசியம். இவற்றையெல்லாம் விட மிக முக்கியம் உற்சாகமான மனோபாவம் தன்னம்பிக்கையுடன் தெளிவான சிந்தனை கொண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற உறுதியுடன் ஒவ்வொரு அடியையும் நீங்கள் எடுத்து வைக்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியம் தேவையில்லாமல் மற்ற மாணவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்து வீணாக்கி விடலாம்

அதே நேரத்தில் தேவையற்ற பயத்தை கொடுத்து உங்களை பலவீனப்படுத்தும் விடலாம். இதை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் திறமை உங்கள் உழைப்பு இதுவே உங்களுக்கு வெற்றியை தரும் மற்றவர்களை பற்றி கவலை இல்லை என்ற மனோபாவம் இருக்கட்டும். சரியாக நம் திறமைகளை அறிந்து முறையாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி என்பது நம் உள்ளங்கையில் தான் இருக்கிறது
Tags:    

Similar News