செய்திகள்
காதல் கணவருடன் மனு கொடுக்க வந்த நர்மதாவை படத்தில் காணலாம்.

பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம்

Published On 2021-04-24 15:25 GMT   |   Update On 2021-04-24 15:25 GMT
திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கீழ்பாகம் சாலம் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகுமார் (வயது 26). மாயனூர் புதுத்தெருவை சேர்ந்த காமாட்சி மகள் நர்மதா (23). இவர்கள் 2 பேரும் மாயனூரில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி கரூர் பாலமலை முருகன் கோவிலில் சுப்பிரமணி நர்மதாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை நர்மதா தனது காதல் கணவருடன் கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தஞ்சம் அடைந்து, ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் நந்தகுமாரின் பெற்றோர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

இதனால் எனது கணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News