செய்திகள்
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை, 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள்) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) www.scholarship.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பித்து விண்ணப்பங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.