நெல்லை:
அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). இவரது மகன் கண்ணன்(33). கண்ணனின் மனைவியை அதே தெருவை சேர்ந்த மேகநாதன் என்ற கணேசன் (35) அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் கணேசன் கண்ணனின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை ராஜகோபால் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து ராஜகோபாலை சரமாரியாக மார்பு மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். இதனிடையே தடுக்க வந்த ராஜகோபால் மகன் கண்ணனுக்கும் கையில் சிறு வெட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாய மடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ராஜகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.