செய்திகள்
உபரி நீர் வெளியேறும் பாதையை ஒட்டி பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

மேட்டூர் அணையில் 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Published On 2021-11-20 03:55 GMT   |   Update On 2021-11-20 03:55 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளது. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் தற்போது 22 ஆயிரத்து 957 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து காவிரியில் கலக்கிறது. இதனால் ஒனேக்கல்லுக்கு நேற்று மாலை நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி என அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் செல்வதால் நடைபாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 65 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலையும் மேட்டூர் அணைக்கு வந்த 65 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரி கரையில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக் கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News