செய்திகள்
லாரிகள்

தமிழகத்தில் 27ந்தேதி முதல் 4 லட்சம் லாரிகள் ஓடாது- பொதுச்செயலாளர் பேட்டி

Published On 2020-12-22 10:03 GMT   |   Update On 2020-12-22 10:03 GMT
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதால் தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறினார்.
திருச்சி:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தென்னிந்திய ேமாட்டார் டிரான்ஸ்போர்ட் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லாரிகளில் வேக கட்டுப்பாடு கருவி மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல், ஸ்டிக்கர் ஒட்டுவது, ஓவர் டைமன்சன் எனப்படும் லோடு ஏற்றும் அளவு தொடர்பான மத்திய அரசின் விளக்கத்தை அமல்படுத்த வேண்டும், தகுதி சான்றிதழ்களை 4 மணி நேரத்தில் வழங்கவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை தவிர மற்றவை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதுபற்றி தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி காலை 6 மணி முதல் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தினால் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது. சிறிய அளவிலான டிரக்கர் உள்பட 12 லட்சம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வர முடியாது.

தமிழக முதல்-அமைச்சரோ அல்லது போக்குவரத்து துறை அமைச்சரோ எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தினால் தமிழகத்தில் நாள்தோறும் சுமார் ரூ.4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்புஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News