செய்திகள்
எல்.கே.சுதீஷ்

கூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்

Published On 2021-03-03 14:26 GMT   |   Update On 2021-03-03 14:26 GMT
விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வர பல கட்சிகள் தயாராக இருப்பதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

பாமகவுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறியே நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஆரணி அருகே நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக்கூட்டத்தில், கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியது கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. தொண்டர்களிடையே சுதீஷ் பேசியதாவது:-

கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது. நாம் அவர்களை கெஞ்சவில்லை. 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால்  வர தயாராக இருப்பதாக பல கட்சிகள் கூறுகின்றன. மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக ஆசைப்பட்டதில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் சேர்கிறதோ, அந்த கூட்டணிதான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News