உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே அனுமதியின்றி மண் கடத்தல்: 2 டெம்போ பறிமுதல்
தக்கலை பகுதியில் அனுமதியின்றி மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மதுரை மண்டல புவியியல் மற்றும் சுரங்க துறை பறக்கும் படை உதவி இயக்குனர் ஸ்ரீகுமார். நேற்று அதிகாலை தக்கலை அருகே பத்மனாபபுரம் அரண்மனை முன்பு வாகன தணிக்கை குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது 2 டெம்போக்கள் வேகமாக வந்தது. அதிகாரிகள் சோதனையிடுவதை கண்ட டிரைவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஓடினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வண்டியை சோதனையிட்ட போது அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் மண் கடத்திய டெம்போக்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக உதவி இயக்குனர் ஸ்ரீகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.