செய்திகள்
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை- ஆயுதங்கள் சிக்கின
புல்வாமா மாவட்டம் மெயின் சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார் மற்றும் ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவ்வகையில், புல்வாமா மாவட்டத்தின் தெலங்காம் கிராமத்தில் இன்று போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று புல்வாமா மாவட்டம் மெயின் சவுக் பகுதியில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 3பேர் காயமடைந்தனர்.