செய்திகள்
கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தினர். அப்போது பழனியாண்டவர் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்து இருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம், சிவளார்பட்டி தாலுகா முத்துசாமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சோலைமுத்துகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.