செய்திகள்
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து 8 பேர் மேல்மருவத்தூருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரை மாலூரை சேர்ந்த நாகேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரப்பம் காமராஜ் காலனியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), அவருடைய அண்ணன் மகனான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் சக்தி (15) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் முருகனும், சக்தியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். சக்தி படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவன் சக்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.