செய்திகள்
ஜெயக்குமார்

மூதாட்டி மரணம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லை போட்டு கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2021-02-19 20:15 GMT   |   Update On 2021-02-19 20:15 GMT
ஆசைக்கு இணங்க மறுத்ததால் மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 11-ந்தேதி அதிகாலை படுகாயங்களுடன் கிடந்த 72 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் நடந்து செல்வது தெரிந்தது.

இதையடுத்து மணலி புதுநகரில் உள்ள ஒரு பெண் கொடுத்த தகவலின் பேரில், திருவொற்றியூரில் பதுங்கி இருந்த ஜெயக்குமார் (வயது 32) என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். கார்பெண்டர் தொழில் செய்து வரும் அவர், திருமணமாகி 2 குழந்தைகளுடன் தாழங்குப்பத்தில் குடியிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று நான் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அப்பகுதியில் வந்த மூதாட்டியை கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது போல் ஏமாற்றி இருள் சூழ்ந்த பகுதிக்கு சென்றேன்.

அப்போது மூதாட்டியை உறவுக்கு அழைத்தேன். அவர் எனது ஆசைக்கு இணங்க மறுக்கவே வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றேன். ஆனால் மூதாட்டி தப்பி எழுந்து ஓடவே ஆத்திரமடைந்த நான், அருகிலிருந்த கட்டையை எடுத்து மூதாட்டியை பலமாக தாக்கினேன்.

அவர் உயிரோடு இருந்தால் மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற பயத்தில் குடிபோதையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து மூதாட்டியின் மீது போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். குற்றவாளியை விரைவாக பிடித்த போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Tags:    

Similar News