ஆன்மிகம்
அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் கூட்டத்தின் நடுவே பவனி வந்த காட்சி. (உள்படம்:-கோனியம்மன்.)

கோனியம்மன் கோவில் தேரோட்டம்: அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மன்

Published On 2021-03-04 02:48 GMT   |   Update On 2021-03-04 02:48 GMT
கோவையில் புகழ் பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.

நேற்று காலை முதல் ராஜவீதியில் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.16 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரி கொடியிறக்கம், 8-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News