செய்திகள்
கைது

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புரோட்டா மாஸ்டர் கைது

Published On 2021-07-21 10:29 GMT   |   Update On 2021-07-21 10:29 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று மாலை குடிபோதையில் வந்தார். அந்த பகுதியில் 4 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு தேவராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டார். இதனால் தேவராஜ் சிறுமியின் வாயை கைகளால் மூடினார். இதில் சிறுமியின் மூக்கில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதை கண்டு பயந்து அவர் அங்கு இருந்து ஓடி விட்டார்.

சிறுமியின் மூக்கில் ரத்தம் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய்க்கு தகவல் கொடுத்தனர். சிறுமியின் தாய் வந்து அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை அவரிடம் சிறுமி கூறினார்.

இது குறித்து சிறுமியின் தாய் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி மற்றும் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்குப் பதிவு செய்து தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News