செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் பாமியானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுலா தலமான பாமியன் நகரில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.