செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பணியாளர்கள் - வேளச்சேரியில் பரபரப்பு
வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பணியாளர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 2 விவிபேட் எந்திரங்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.
தகவலறிந்து பொதுமக்கள் சிலர் அவர்களை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் என்பதும், அவை வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் இல்லை எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த விவிபேட் எந்திரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:
ஆரம்பகட்ட விசாரணையாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுபற்றி போனில் கேட்டறிந்தேன். இந்த தவறை மாவட்ட தேர்தல் அதிகாரியின் 2 கீழ்நிலை பணியாளர்கள் செய்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியின் முதல்கட்ட விசாரணையில், அவை வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாக்கு எந்திரம் தொடர்பான தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.