செய்திகள்
மும்பை கடலில் கரைக்க எடுத்துச்செல்லப்படும் விநாயகர் சிலையை படத்தில் காணலாம்.

ஆனந்த சதுர்த்தி: மும்பையில் ஒரே நாளில் 34 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு

Published On 2021-09-21 02:15 GMT   |   Update On 2021-09-21 02:15 GMT
விநாயகர் சிலை கரைக்க சென்ற இடத்தில் 3 வாலிபர்கள் கடலில் மூழ்கிய சம்பவம் வெர்சோவா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஆனந்த சதுா்த்தியையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மும்பை :

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நாட்டிலேயே மும்பையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆனைமுகத்தோனை வழிபடுவார்கள். இதனால் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களும் மும்பை நகரம் திருவிழா கோலம் காணும்.

இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. மண்டல்கள் சார்பில் வைக்கப்படும் விநாயகரை வழிபட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல வீடுகளில் பிரதிஷ்டை செய்த விநாயகரை நீர்நிலைகளில் கரைக்க 5 பேரும், மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை கரைக்க கொண்டு செல்ல 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பிரதிஷ்டை செய்த விநாயகரை வீட்டு அருகில் அமைக்கப்பட்ட செயற்கை குளங்களில் கரைத்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிறைவடைந்தது. இதில் வழக்கமாக விடிய, விடிய நடைபெறும் லால்பாக் ராஜா சிலை கரைப்பு ஊர்வலம், கட்டுப்பாடுகள் காரணமாக வரலாற்றில் முதல்முறையாக நேற்று முன்தினம் மதியம் நடந்தது. மேலும் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மண்டல் நிர்வாகிகள் மட்டுமே பங்குபெற்றனர். எனினும் வழியெங்கும் லால்பாக் விநாயகருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் விநாயகர் மீது பூ மழையை தூவினர். இதேபோல லால்பாக் விநாயகரை கரைக்க கொண்டு செல்லப்படும் போது சிலைக்கு முன்னும், பின்னும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல பல முக்கிய மண்டல்களை சேர்ந்த விநாயகர் சிலையும் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது. ஆனந்த சதுர்த்தியன்று மும்பையில் 34 ஆயிரத்து 452 சிலைகள் கரைக்கப்பட்டது. இதேபோல ஒட்டுமொத்தமாக 10 நாள் விநாயகர் சதுர்த்தியின் போது 1 லட்சத்து 64 ஆயிரத்து 761 சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக 5 நாளில், 66 ஆயிரத்து 299 சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தது.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் பிரதிஷ்டை செய்து இருந்த விநாயகருக்கு பூஜை செய்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த செயற்கை குளத்தில் கரைத்தார்.

இதற்கிடையே வெர்சோ ஜெட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 வாலிபர் விநாயகர் சிலையை கரைக்க கடலுக்குள் இறங்கினர். அப்போது துரதிருஷ்டவமாக கடலில் மூழ்கினர். இதில், அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரை பத்திரமாக மீட்டனர். மற்ற 3 வாலிபர்களும் கடலில் மாயமானார்கள். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் மாயமான வாலிபர்களை தேடினர். இதில், நேற்று 2 வாலிபர்கள் கடலில் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றொரு வாலிபரை தேடும் பணி நடந்து வருகிறது. கடலில் மூழ்கிய வாலிபர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

விநாயகர் சிலை கரைக்க சென்ற இடத்தில் 3 வாலிபர்கள் கடலில் மூழ்கிய சம்பவம் வெர்சோவா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஆனந்த சதுா்த்தியையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழகம் முழுவதும் தொழில் கல்வியில் 12 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்ற வகையில் அரசுக்கு ரூ.250 கோடி செலவாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News