செய்திகள்
கோப்புபடம்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-26 11:25 GMT   |   Update On 2020-10-26 11:25 GMT
பெண்களை இழிவுபடுத்தும் மனு தர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை இழிவாக எழுதியுள்ள மனு தர்ம நூலை தடை செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் நிலவன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச்செயலாளர் தமிழ், நகர அமைப்பாளர் கபிலன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டாலின், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் மகேந்திரன், தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி கதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பெண்களை தவறாக சித்தரித்து எழுதிய மனுதர்ம நூலின் நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் குடவாசல் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயளாளர் சிறைசெல்வன் தலைமை தாங்கினார். இதில் 25-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், கோட்டூர் ஒன்றிய செயலாளர் கவாஸ்கர், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஹாஜா, கூத்தாநல்லூர் நகர செயலாளர் ராபின் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைச்செயலாளர் பூமிநாதன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, விவசாய அணி மாநில துணைச்செயலாளர் முருகையன், நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் அருள்செல்வன், இஸ்லாமியர் பேரவை மாவட்ட அமைப்பாளர் முகமது ஹசன், திருத்துறைப்பூண்டி நகர பொருளாளர் வெள்ளிமலை ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்னிலம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நன்னிலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கோட்டூர் அருகே கம்பன்குடி ஆர்ச்சில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி தொகுதி அமைப்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய அமைப்பாளர் பாண்டியன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் கவாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டு திருமாவளவன் மீது மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News