ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் ரூ.4 கோடி கஞ்சா கடத்திய 5 பேர் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில போலீசார் போதை பொருட்கள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று திருச்சூர் மாவட்டம் கொரட்டி போலீஸ் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள தேசிய நெடஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் ரூ.4 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கஞ்சாவுடன் காரில் வந்தது லாலூர் பகுதியை சேர்ந்த ஜோஸ், மன்னூத்தி, சுபீஸ், பழையனூர் மனீஷ், தனிக்குடம் ராஜீவ் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனைக்கு கொடுக்க வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.