செய்திகள்
திஷா ரவி

டூல்கிட் வழக்கு... திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2021-02-20 13:35 GMT   |   Update On 2021-02-20 13:35 GMT
சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவடைந்ததும் அவரை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஜனவரி 26ல் நடந்த வன்முறைக்கும் டூல்கிட்டுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், மேலும் சில தகவல்களை பெற வேண்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

திஷா தரப்பில் தரப்பில் அவரது வழக்கறிஞர் சித்தார்த்த அகர்வால் வாதாடினார். அதில், திஷா ரவியின் செயல்பாடுகள், அவருக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை காட்டுவதாக கூறினார். சீக்கியர்களுக்காக நீதி அமைப்புடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News