லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...?

Published On 2019-06-26 02:48 GMT   |   Update On 2019-06-26 02:48 GMT
‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.
‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.

ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.

இந்த முறை உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஒல்லியாக முடிவதால் ‘டீடாக்ஸ் டயட்டை’ பலரும் விரும்புகிறார்கள். இது நல்லதுதான் என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.

குழந்தைகளிடத்தில் இந்த உணவு கட்டுப்பாட்டை பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.

எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.
Tags:    

Similar News