செய்திகள்
உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம். ப சிதம்பரம்
உள்ளாட்சியில் காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை:
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கூட்டணி வைத்த கட்சிகளுடன் திமுக களம் இறங்கியது. அதிமுகவை விட அதிக இடங்களை திமுக கைப்பற்றியது. நாளை ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவுக்கு எதிராக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி கூட வழங்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்து இருந்தார். மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை.
ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது.
303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுகவினால் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது:-
கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல. 2021 சட்டன்றத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறினார்.