செய்திகள்
இம்ரான் கான் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்

சீனா சென்றார் இம்ரான் கான் - அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தை

Published On 2019-10-08 08:10 GMT   |   Update On 2019-10-08 08:10 GMT
இரு நாள் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.
பீஜிங்:

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி இந்தியா வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா  நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர், மறுநாள் மாமல்லபுரம் சென்று, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது  பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் இருநாள் பயணமாக சீனா வந்துள்ளார். இன்று காலை சீனா வந்த  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனாவின் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கான சீன தூதுவர் யா ஜிங்  இருவரும் வரவேற்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது  இருதரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் பற்றி பேசப்படும் என பாகிஸ்தான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான  சூழ்நிலை நிலவி வருகிறது. சீன அதிபர் இன்னும் 3 தினங்களில் இந்தியா வரவுள்ள நிலையில், இம்ரான் கானின் சீன பயணம் அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News