செய்திகள்
தல்லாகுளம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தல்லாகுளம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை:
மதுரை கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி சங்கீதா (வயது 33).
இவர் நேற்று இரவு கோசாகுளம் 2-வது தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு தங்கி விட்டு, இன்று காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
மாவட்ட நீதிமன்றம் சாலையில் சங்கீதா சென்ற போது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்னால் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சங்கீதா கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கசங்கிலியை பறித்துச் சென்றனர்.
அதிர்ச்சியடைந்த சங்கீதா, சுதாரித்துக் கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு மக்கள் திரண்டனர். ஆனால் அதற்குள் நகை பறிப்பு திருடர்கள் மாயமாக மறைந்து விட்டனர்.
இது குறித்து தல்லாகுளம் போலீசில், சங்கீதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றன்.
மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையில், பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.