செய்திகள்
சாலையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

தென்னம்பாளையம் பகுதியில் சாலையில் தவறவிட்ட ரூ.2¾ லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு

Published On 2021-05-08 22:12 GMT   |   Update On 2021-05-08 22:12 GMT
சாலையில் தவறவிட்ட ரூ.2¾ லட்சத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்தால் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
வீரபாண்டி:

திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு ஆர்.வி. நகரை சேர்ந்தவர் கதிர்ரேஸ் குமார் (வயது 35), பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், நேற்று புதிய வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக தனது தாயார் மற்றும் மனைவி பூரணி உடன் திருப்பூர்-பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் ஷோரூம் காலை 10 மணி அளவில் பணத்துடன் வந்துள்ளார்.

காரிலிருந்து இறங்கும்போது பூரணி ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்தை தவற விட்டதாக தெரிகிறது. டைல்ஸ் வாங்காமல் வீடு திரும்பிய பிறகு வீட்டிற்கு சென்று பார்த்த போது பணம் இல்லை என்பதை அறிந்து பதட்டம் அடைந்தனர். உடனே திருப்பூர் வீரபாண்டி பிரிவு சோதனைச்சாவடியில் உள்ள போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சோதனைச் சாவடியில் இருந்த வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் பாஸ்கரன் ஆகியோர், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கணபதி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் அப்பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் துரிதமாக செயல்பட்டனர்.

விசாரணையில் அப்பகுதியில் சாலையோரம் பூக்கடை வைத்து நடத்தி வரும் ஒருவரிடம் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக்கொடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News