செய்திகள்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது, உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.