செய்திகள்
தற்கொலை

வில்லியனூரில் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-01-21 12:36 GMT   |   Update On 2021-01-21 12:36 GMT
வில்லியனூரில் பெட்டிக்கடை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் கிருஷ்ணா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது55). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

முருகனும் அவரது மனைவி கஸ்தூரியும் வில்லியனூர்-பத்துக்கண்ணு செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தனர். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

அடிக்கடி மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து விட்டு பெட்டிக்கடையை சரியாக கவனிப்பதில்லை. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.

மேலும் புதிதாக வீடு கட்டி வருவதால் கட்டுமான பணிக்கு பணம் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இப்படி மது குடித்து செலவழிக்கிறீர்களே என்று அடிக்கடி கூறி வந்தார். இதனால் முருகன் விரக்தியில் இருந்து வந்தார்.

அதுபோல் நேற்று காலை முருகன் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அப்போது கஸ்தூரி கணவனை கண்டித்து விட்டு பணம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி கொண்டு முருகன் மது குடிக்க சென்றார்.

வெகு நேரமாக பெட்டிக்கடைக்கு கணவன் வராததால் சந்தேகமடைந்த கஸ்தூரி புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News