செய்திகள்
பாலியல் தொந்தரவு

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மீது கொடூர தாக்குதல்... பக்கத்து வீட்டுக்காரர் கைது

Published On 2021-02-03 06:55 GMT   |   Update On 2021-02-03 06:55 GMT
உத்தர பிரதேசத்தில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் அத்துமீறி கொடூரமாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் சிக்ரி கிராமத்தில், 30 வயது பெண் ஒருவர், தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் டெல்லியில் தங்கியிருந்து வேலை பார்க்கிறார். 

இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதேந்திரா என்ற நபர், அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி உள்ளார். ஆனால் அந்தப் பெண் ஆசைக்கு இணங்க மறுக்கவே, பலவந்தமாக அவரை அடைய முயன்றுள்ளார். 

அவரிடம் இருந்து  தப்பிக்க, அந்தப் பெண் கடுமையாக போராடி உள்ளார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதேந்திரா, அந்த பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி உள்ளார். அத்துடன் வயற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வந்து பார்க்கையில், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் இந்த சம்பவத்தை காவல்துறையினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும், காயமடைந்த பெண்ணின் வீடியோ வைரலான பிறகே, சதேந்திரா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ததாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கற்பழிப்பு முயற்சியை தடுத்த பெண் மீது நடந்த இந்த கொடூரமான தாக்குதல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News