தொழில்நுட்பம்
போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு
அமெரிக்காவில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள பீட்டா வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அமெரிக்காவில் கடும் போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுவதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
"ஆண்ட்ராய்டு 11 பற்றி தெரிவிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை," என கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பற்றிய புதிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுகம் செய்யப்பட்டதும் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு நான்காவது ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவின் மின்னியாப்பொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்டு எனம் கருப்பினத்தவரை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் மிதித்தே கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.