செய்திகள்
சிறை தண்டனை

லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2021-11-17 04:19 GMT   |   Update On 2021-11-17 04:19 GMT
வாரிசு சான்று வழங்க லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.

இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.

அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.

3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
Tags:    

Similar News