செய்திகள்
திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மழைநீர் சேகரிப்பே நிரந்தர தீர்வு - மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 14 லட்சமாக உள்ளது. இங்கு தினசரி குடிநீர் தேவை 18 கோடி லிட்டராக உள்ளது.
திருப்பூர்;
திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தொழில் துறையினர், கட்டுமானத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசியதாவது:
திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 14 லட்சமாக உள்ளது. இங்கு தினசரி குடிநீர் தேவை 18 கோடி லிட்டராக உள்ளது. குடிநீர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. திருப்பூரைப் பொறுத்த வரை பிற மாவட்டங்கள் போல் நீர் ஆதாரம் இல்லை.
அருகேயுள்ள மாவட்டங்களைச் சார்ந்து தான் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது. தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் நிலையில் குடிநீர் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு என்பது குடிநீர் சிக்கனம், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் ஆகியன.
மழை நீர் மட்டுமே நமக்கு நேரடியான நீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் பயன்பாடு மட்டுமே நிரந்தர தீர்வு. இவ்வாறு அவர் பேசினார்.