செய்திகள்
கைது

வாலாஜா அருகே இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது

Published On 2020-10-16 07:56 GMT   |   Update On 2020-10-16 07:56 GMT
வாலாஜா அருகே இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு டிக் டாக் செயலி மூலம் வாலாஜாவை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய பிறந்தநாளையொட்டி, தன்னை சந்திக்க வருமாறு இளம்பெண்ணை, சாந்தகுமார் அழைத்துள்ளார். அதன்படி சாந்தகுமாரைப் பார்க்க அவர் செங்காடு வந்துள்ளார். அவரை, சாந்தகுமார் தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கவும் கூறியுள்ளார். அதன்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதை பிடிக்காத சாந்தகுமாரின் உறவினர்கள், தாமரைப்பாக்கத்தில் உள்ள பாஷா (37) என்பவரிடம் அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். பின்னர் இளம்பெண்ணை வீட்டைவிட்டு விரட்டியுள்ளனர். இதனால் அவரை சிலர் மீட்டு வேலூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி ராணிப்பேட்டை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செங்காடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார், அவரது தாய் வளர்மதி (42), சித்தி செந்தாமரை (32), மாமா செல்வராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த ஆற்காடு அடுத்த தாமரைபாக்கத்தை சேர்ந்த டாக்டர் பாஷாவை நேற்று ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு டாக்டராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
Tags:    

Similar News