செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கே.கே.நகர்:
சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திட்டக்குடி சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் ஆகிய இருவரிடமிருந்தும், துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த அகமது பைசல்என்ற பயணியிடம் இருந்தும் மொத்தம் 977 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 726 கிராம் செயின் வடிவிலும் 251 கிராம் பேஸ்ட் வடிவிலும் மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.36.65 லட்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.