செய்திகள்
ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி - கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் நேரில் ஆய்வு
ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை கூடுதல் கலெக்டர்வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வுநடத்தினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏரியூர் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஏரியூர் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஏரியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் திட்டத்தின் கீழ் ஏரியூர் பகுதியில் மயானத்திற்கு அணுகுசாலை, ராமகொண்ட அள்ளி பகுதியில் மயானத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகியவை தொடர்பான பணிகள் குறித்தும் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு நடத்தினார்.
இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்போது அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி, செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.