செய்திகள்
பட்னாவிஸ் பதவியேற்பு

3 நாள் அரசின் நினைவு தினம் இன்று - பாஜகவை வெளுத்துவாங்கிய சிவசேனா

Published On 2020-11-24 06:03 GMT   |   Update On 2020-11-24 06:03 GMT
2019-ம் ஆண்டு மகாரஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜக அரசு 3 நாட்களில் கவிழ்ந்தது.
மும்பை:

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54, மற்றவை 29 தொகுதிகளை கைப்பற்றின.

ஆட்சியமைக்க 145 தொகுதிகள் தேவை என்றாலும் பாஜக-சிவசேனாவுடன் கூட்டணி அமைத்திருந்ததால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது. இதனால், பெரும்பான்மை யாருக்கும் இல்லாததால் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக 2019 நவம்பர் 22-ம் தேதி இரவு ஆலோசனை நடத்தினர். ஆனால், அதற்கு அடுத்தநாள் யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் பாஜகவின் தேவேந்திரபட்னாவிசுடன் இணைந்து ஆட்சியமைத்தார்.

தேவேந்திரபட்னாவிஸ் மீண்டும் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார். அவருடன் அஜித் பவார் துணை முதல்மந்திரியாக பதவியேற்றார். பதவியேற்பு விழா நவம்பர் 23 காலை 8 மணிக்கு நடைபெற்றது. 

இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னெவென்றால் மகாராஷ்டிராவில் அப்போது அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சியை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் நவம்பர் 23 அதிகாலை 5.47 மணிக்கு நீக்கியுள்ளார். 

இந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 24-ம் தேதி முதல் பட்னாவிஸ் மாநிலமுதல்மந்திரியாக முறைப்படி பொறுப்பேற்றார்.



பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நவம்பர் 26-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் மறுநாளே (நவம்பர் 27) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ராஜினாமா செய்தது.  

பதவியேற்ற 80 மணி நேரத்திலேயே பதவியில் இருந்து பாஜக அரசு ராஜினாமா செய்தது. அதாவது 2019 நவம்பர் 24-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை 3 நாட்கள் பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்மந்திரியாக இருந்தார். 

இந்த நிகழ்வு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் நேற்று பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மந்திரி ரோஷப் படில் தவிவ், ‘மகாராஷ்டிராவில் இன்னும் 3 மாதங்களில் பாஜக ஆட்சியமைக்கும்’ என கூறினார். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் 3 நாட்கள் ஆட்சியில் இருந்த பாஜக கடந்த ஆண்டு இதே நாள் (நவம்பர் 24) தனது ஆட்சியை அமைத்தது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவத் கூறியதாவது:-

கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 3 நாள் அரசின் நினைவு தினம் இன்று. எங்கள் அரசு 4 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். எதிர்க்கட்சியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதால் அக்கட்சியின் தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறிவருகின்றனர். மகாராஷ்டிர மக்கள் இந்த அரசுடன் தான் உள்ளனர் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

என்றார்.
Tags:    

Similar News