செய்திகள்
மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகை அன்று இவர், பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக கடையில் இருந்து கரும்பு வாங்கி வந்தார்.
கரும்புடன் வீட்டு மாடி படிக்கட்டில் ஏறியபோது, அருகில் சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக கரும்பு உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.