செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலையில் மனைவி-மகன் வீட்டை விட்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-16 10:47 GMT   |   Update On 2021-10-16 10:47 GMT
திருவண்ணாமலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பேகோபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45) கட்டிட தொழிலாளி.இவரது மனைவி பழனியம்மாள்.

இவர்களுக்கு தீபா என்ற மகளும், முத்துக்குமார் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணனுக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணன் திடீரென மனைவியை தாக்க முயன்றுள்ளார்.அதனை மகன் முத்துக்குமார் தடுத்து தந்தையை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணன் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கிருஷ்ணனின் தம்பி ரமேஷ் திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது அண்ணன் சாவில் சந்தேகம் உள்ளது என்று புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News