உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை வேட்புமனு தாக்கல்

Published On 2021-12-03 07:19 GMT   |   Update On 2021-12-03 07:19 GMT
சனிக்கிழமை (4-ந்தேதி) அமாவாசை நல்ல நாளாக கருதப்படுவதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நாளை வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்தது.

பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டே அ.தி.மு.க.வுக்கு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். அப்போது கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை.

அதன்பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்ததால் கடந்த ஆண்டும் உள்கட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மாதத்திற்குள் (டிசம்பர்) உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. தலைமை விரிவான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இதற்காக நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டப்பட்டு கட்சி விதிகளில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்வார்கள் என்று செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.



செயற்குழு முடிந்த மறுநாளான நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு இன்றும் (3-ந்தேதி) நாளையும் (4-ந்தேதி) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை 5-ந்தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுவை 6-ந் தேதி மாலை 4 மணிவரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 7-ந்தேதி தேர்தல் நடைபெறும். 8-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகளாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை கழகத்தில் தேர்தல் அதிகாரிகள் இருவரும் வேட்புமனுக்களை பெறுவதற்காக இன்று காலையில் 10 மணியில் இருந்து தயாராக இருந்தனர். ஆனால் காலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

சனிக்கிழமை (4-ந்தேதி) அமாவாசை நல்ல நாளாக கருதப்படுவதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நாளை வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள்.

அனேகமாக இதில் போட்டி இருக்காது என்பதால் ஒருமனதாக இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று இரவுதான் சென்னை வருகிறார். எனவே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நல்ல நேரம் பார்த்து நாளை வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News