செய்திகள்
மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published On 2020-10-14 18:21 GMT   |   Update On 2020-10-14 18:21 GMT
நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது புதிய வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
கரூர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், கரூரில் 261 வாக்குச்சாவடி மையங்களும், கிருஷ்ணராயபுரத்தில் 253 வாக்குச்சாவடி மையங்களும், குளித்தலையில் 267 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல்கள் கலெக்டர் அலுவலகம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்அடிப்படையில், வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் துணை வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அடுத்த மாதம் 16-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு உதவி அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பின்னர் தெரிவிக்கப்படும். 2021-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20-ந் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்த விவரங்களை படிவங்களை பூர்த்தி செய்து கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News