செய்திகள்
விபத்து

திருமானூர் அருகே லாரி மோதி தாத்தா-பேத்தி பலி

Published On 2020-09-23 09:18 GMT   |   Update On 2020-09-23 09:18 GMT
திருமானூர் அருகே லாரி மோதி தாத்தா, பேத்தி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிளில் தனது மகள் காயத்ரி (24), பேத்திகள் குணஸ்ரீ (5), சுபஸ்ரீ (3) ஆகியோருடன் திருமானூரில் இருந்து கல்லூருக்கு சென்றார்.

திருமானூர் பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள திருப்பத்தில் திரும்பும்போது அப்பகுதியில் லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருப்பியபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சேகர், குணஸ்ரீ பலத்த காயமடைந்தனர். இதையடுத்து 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் இறந்தார்.

குணஸ்ரீ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குணஸ்ரீயும் பரிதாபமாக இறந்தாள்.

இந்த விபத்து தொடர்பாக திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த சுலைமான் (42) என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்திற்கு காரணமான லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News