தமிழ்நாடு
இன்று காலை காணப்பட்ட கடும் பனிப்பொழிவு.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

Published On 2022-01-22 03:49 GMT   |   Update On 2022-01-22 03:49 GMT
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், கடையம், குற்றாலம், வாசுதேவநல்லுர், ஆலங்குளம் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
செய்துங்கநல்லூர்:

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வந்தது. மழைக்காலம் முடிந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டது.

நெல்லை மாநகரப் பகுதிகளான நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளைத்தில் இன்று அதிகாலை அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மழையில் நனைந்தது போல் காணப்பட்டது.

அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குல்லா அணிந்தவாறும், தலைப்பாகை கட்டியவாறும் சென்றனர். வண்ணார்பேட்டை, சமாதான புரம், டவுன் எஸ்.என். நெடுஞ்சாலை, பாளை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

நாளை முழு ஊரடங்கையொட்டி ஏராளமான பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே பொருட்களை வாங்குவதற்காக டவுன், பாளை, தச்சநல்லூர், நயினார் குளம் மார்கெட்டுகளில் திரண்டனர். அப்போது கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், கடையம், குற்றாலம், வாசுதேவநல்லுர், ஆலங்குளம் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செய்துங்கநல்லூர், கருங்குளம், புதுக்குடி போன்ற பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. திருச்செந்தூர்-நெல்லை பிரதான சாலையில் பனி மூட்டம் காரணமாக அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

இதேபோல் எட்டயபுரம் பகுதியில் குறிப்பாக படர்ந்தபுளியில் காலை 8 மணி வரையும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
Tags:    

Similar News