செய்திகள்
திங்கள்சந்தை அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி
திங்கள்சந்தை அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை:
மண்டைக்காடு அருகே கீழ்க்கரை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 38), தேங்காய் வெட்டும் தொழிலாளி.
நேற்று முன்தினம் வேணுகோபால் தனது மோட்டார் சைக்கிளில் கண்டன்விளையில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரணியல் காற்றாடி மூடு சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே மிடாலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக வேணுகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேணுகோபால் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வேணுகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.