லைஃப்ஸ்டைல்
மொழி படிப்புகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள்..

மொழி படிப்புகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள்..

Published On 2021-03-20 04:22 GMT   |   Update On 2021-03-20 04:22 GMT
மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.

ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்.

ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.

அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க... என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும், பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.

உலகம் திறந்த சந்தையான பிறகு மொழி பெயர்ப் பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். இதற்கு இரண்டு மொழிகளில் புலமை அவசியம். இந்த வரிசையில் ஒப்பிலக்கியத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் திறமையை மெருக்கேற்றிக்கொள்பவர்களுக்கு அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் வாய்க்கும். முதுநிலையிலும் இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.

குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்ற பட்டப்படிப்புகளோடு மொழி பட்டங்களை தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் விருப்ப பாடமாக தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையில் தமிழைப் பாடமாகப் படித்தால் தேர்வு மேலும் சுலபமாகும். அதுபோலவே அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் மற்றும் ரெயில்வே, வங்கித்துறை போட்டித்தேர்வுகளிலும் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சிறப்பான எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.

பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ., கே.பி.ஓ. போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் மிளிருகிறார்கள். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக்குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். அதிலும் மின்பதிப்புத் துறையில் ‘டிஜிட்டல் காப்பி ரைட்டர்’ பணிக்கு அதிகத் தேவை நிலவுகிறது.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நிகராகப் பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆங்கிலத்தை சார்ந்திருப்பதால் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணிபெறலாம்.

வெளிநாடுகளுக்குப் படிக்க செல்லும் மாணவர்களுக்கான ஐ.ஈ.எல்.டி.எஸ். மற்றும் டி.ஓ.எப்.ஈ.எல். மையங் களின் தேவை அதிகமாக உள்ளது. ஆங்கிலப் பட்டம் முடித்தவர்கள் கூடுதலாக இதற்கென தனியாக பயிற்சியை முடித்தோ அதற்கான மையங்களின் அங்கீகாரம் பெற்ற கிளை பயிற்சி மையங்களை தொடங்கியோ சொந்தக்காலில் நிற்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை தொடர்பான வழிகாட்டுதல் மையங்களை தொடங்கலாம். இதற்கு அத்துறை சார்ந்த நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்த அனுபவமே கைகொடுக்கும்.

இது தவிர, ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுத தெரிவது என்பது பரவலான வேலை வாய்ப்புச்சந்தை. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் தங்களது ஆய்வறிக்கை அல்லது தொழில்சார் அறிக்கைகளை வடிவமைக்கும்போது மொழிசார் வல்லு நரின் உதவி அதிகமாகத் தேவைப்படும். வீட்டிலிருந்தபடி யும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக் கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத்துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது போன்ற வற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு. தற்போது முதுநிலை படிப்பாக சட்டம், மனிதவளத் துறை, மேலாண்மைத் துறை படிப்புகளை மேற்கொள்வதும் பரவலாகிவருகிறது.
Tags:    

Similar News