செய்திகள்
கோப்பு படம்

மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா

Published On 2020-11-29 12:31 GMT   |   Update On 2020-11-29 12:31 GMT
மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என சீன அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பீஜிங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்ற தகவலை சீனா மறைத்ததையடுத்து தற்போது உலகம் முழுவதும் 218 நாடுகள்\யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதுவரை 6 கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 14 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், இந்த கொடிய வைரஸ் தங்கள் நாட்டில் உருவானது என்ற உண்மையை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவத்தொடங்கியதையடுத்து, அந்த நாடுகளில் தான் முதன்முதலில் கொரோனா உருவானதாக சீனா குற்றம் சுமத்தியது.

குறிப்பாக அமெரிக்காவில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் தான் கொரோனா வைரஸ் முதலில் உருவானதாக குற்றம் சுமத்தியது. இதற்கு எந்த ஆதாரத்தையும் சீனா காண்பிக்கவில்லை. 

மேலும், சீனாவில் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கொரோனா பரவலுக்கு சீனா பொறுப்பேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது குற்றம்சுமத்துவதை சீனா தவிர்த்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் உருவானதாக தற்போது பழியை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது சீனா. சீன அகாடமி ஆம் சைன்ஸ் அமைப்பை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவினர் கொரோனா இந்தியாவில் தான் முதலில் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த விஞ்ஞானிகள் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:-
 
கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019-ம் ஆண்டு கோடை காலத்தில் (ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம்) தான் கொரோனா உருவாகியிருக்கலாம். கொரோனா வைரஸ் விலங்குகளால் சாக்கடை நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. வுகான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதில் உண்மை இல்லை.
 
கோடைகாலத்தில் இந்தியாவில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டால் குரங்குகள் உள்பட விலங்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்படுகிறது. இது நிச்சயம் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கு இடையேயான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். 

அதாசாரண வெப்பக்காற்று மூலம் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக்கூடும் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை சில மாதங்களுக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்படாமல் பரவ உதவியுள்ளது.    

வுகானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல . விசாரணையில் வங்காளதேசம் , அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷியா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயில் பத்திரிக்கையிடம், சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறினார். 

கொரோனா வைரஸ் உகானில் தோன்றியதை மறைக்க சீனாமற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல’ என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News