செய்திகள்
எம்எஸ் டோனி

லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி

Published On 2019-08-10 05:33 GMT   |   Update On 2019-08-10 05:33 GMT
சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு சிறிது நாட்களுக்கு அவர் ராணுவ சேசவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார்.

சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் ராணுவ சேவை செய்ய விருப்பம் தெரிவித்தார். அதன் பேரில் டோனி ராணுவ சேவைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 31-ந்தேதி டோனி ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கவுரவ எலட்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் அணியில் சேர்ந்து டோனி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

வருகிற 15-ந்தேதி வரை ராணுவ சேவையை டோனி மேற்கொள்ள உள்ளார். 15-ந்தேதி அவர் ராணுவ சேவையை நிறைவு செய்யும் முன்பு அன்று சுதந்திர தினத் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காஷ்மீரில் இருந்து லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்த யூனியன் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அங்கு முதன் முதலாக டோனி மூலம் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். லடாக்கில் டோனி தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்த ராணுவ அதிகாரிகள், 15-ந்தேதி காலை லடாக்கில் எந்த இடத்தில் கொடி ஏற்றுவார் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக டோனி கொடி ஏற்றும் இடம் அறிவிக்கப்படாமல் உள்ளது. டோனி கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் லடாக் தொகுதியின் இளம் எம்.பி. ஜம்யங் செரிங் கலந்து கொள்ள உள்ளார்.

சமீபத்தில் இவர் பாராளுமன்றத்தில் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தி.மு.க. எம்.பி.க்களுக்கு அந்த இளம் பா.ஜனதா எம்.பி. கொடுத்த பதிலடி புகழ் பெற்ற பதிலாக மாறியுள்ளது.
Tags:    

Similar News